search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கராபுரம் தந்தை கொலை"

    சங்கராபுரம் அருகே திருமணம் செய்துவைக்காததால் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. #Murder

    ரிஷிவந்தியம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மூங்கில் துறைப்பட்டு கொடியனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 65). இவரது மனைவி பொடி (60). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். 3-வது மகன் கோபி (35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் கோபி தனது தாய், தந்தையிடம் தனக்கு உடனடியாக திருமணம் செய்து வையுங்கள் என கூறினார். அதற்கு அவர்கள் விரைவில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என கூறினர். ஆனால் வெகுநாட்களாகியும் கோபிக்கு திருமணம் செய்து வைக்கவில்லை. இதனால் கோபி அவரது பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு கோபி நான் வெளி நாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை என்ன செய்தீர்கள், எனக்கு உடனடியாக திருமணம் செய்து வையுங்கள் என அவரது தந்தை கந்தனிடம் கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    ஆத்திரம் அடைந்த கோபி தனது தந்தை கந்தனின் தலையை பிடித்து சுவற்றில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த கந்தன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட கந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கோபியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்துவைக்காததால் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

    ×